Kathir

நவம்பர் 2004
மதுரை

டேய் கதிர், டேய்…, எழுந்திரி டா
மணி பத்து ஆகுது இன்னும் என்னடா தூக்கம்..! எந்திரிச்சி சீக்கிரம் வெடி எல்லாம் எடுத்து வெச்சு கடையில உக்காரு..!
இன்னும் ஒரு வாரம்தான் நல்ல யாவாரம் இருக்கும்.

ம்மா மழை பெய்யுதும்மா.., கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன், இந்த மழைல யாருமா வரப்போரா?ன்னு புலம்பியபடி புரண்டு படுக்கிறான், கதிர்.

இரவெல்லாம் பெய்த மழை, காலையில்
தூறலிட்டபடியே இருந்தது..!

ண்ணே….! ண்ணே….!
ரோல் கேப் இருக்கா ண்ணே….!

அடேய் தவக்காளை, இந்தா வரேன் இரு..,

தூக்கத்துலயே எந்திரிச்சி போயி ஒரு ரூபாய்க்கு 4ன்னு சொல்லி எடுத்து கொடுக்குறான் கதிர்.

ண்ணே….! 2 போதும் ண்ணே….!
50 பைசாக்கு தேன்மிட்டாய் கொடுங்கன்னு கேக்குறான், தவக்காளை…!

பொட்டு கேப் வேணுமா ரோல் கேப் வேணுமா..!

பொட்டு கேப் எல்லாம் பொம்பளப்
பிள்ளைங்க வெடிக்கிறதுண்ணே….! எனக்கு ரோல் கேப் கொடுங்கன்னு சொல்லி வாங்கிட்டு போறான் தவக்காளை.

சற்று நேரத்தில்,
சரி சரி சீக்கிரம் வா சாப்பிட்டுட்டு போயி உக்காருன்னு, அம்மாவோட சத்தம் கேட்டது..!

கதிர் பத்தி சொல்லலையே, நம்ம கதாநாயகன் இப்போ 8ஆவது தான் படிக்கிறார்..,

அவன் பாட்டி தாத்தா ஊரு சிவகாசி பக்கம் ஒரு கிராமம்.. இங்க மதுரைல அம்மாவோட இருக்கான். ஒரு சின்ன பெட்டிகடை தான் வருமானம்.

தீபாவளி சீசன் வந்தாதான் இவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. 4 மாசம் சுத்து வட்டாரத்துலயே இவன் கடையில தான் வெடி, வாழ்த்து அட்டை எல்லாம் ஒரே இடத்துல கிடைக்கும்..

ஆயுத பூஜைல ஆரம்பிச்சு பொங்கல்வர வருமான பிரச்சனை இல்லாம இருக்கும்.
பள்ளிக்கூடம் போய்கிட்டே எல்லா வேலையும் கவனிச்சிப்பான்.

படிப்புல கில்லாடி, அறிவியல் அத்துப்பிடி, ஆங்கிலம் சரளமா பேசலேன்னாலும் புரிஞ்சிப்பான்.

வெடின்னா உசுரு, அது சம்மந்தமா படிக்கணுன்னு ஆசை.. ஒரே ஒரு விசயத்தில் ரொம்ப சுட்டி.., அதுவும் வெடில தான்..,

வெடி மருந்தை எடுத்து வித்தியாச வித்தியாசமா வெடிச்சு தெருவுல இருக்க எல்லாரையும் வியக்க வைப்பான்..!

நல்லா படம் வரைவான், இந்த வாழ்த்து அட்டை எல்லாம் இவனே தயாரிப்பான்,
தெருவில் இருக்கும் இளசுகள் எல்லாம் இவன் கடையில வந்து ஸ்பெசலா செஞ்சி வாங்கிட்டு போவாங்க..,

சொல்ல மறந்துட்டேனே…, இவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கு, “Antenna Specialist”. துல்லியமா செட் பண்ணுவான். டிவி பளிச்சுன்னு தெரியும்.
ஞாயிற்று கிழமை ரொம்ப துறு துறுன்னு இருப்பான், தூர்தசன் சேனல்ல நம்ம சக்திமான் பாக்குறதுக்கு இவன் வீட்டுல ஒரு கூட்டமே இருக்கும்..

சரி நாம கதைக்கு திரும்புவோம், நம்ம கதிரை பத்தி சொல்றேன்னு நானும் 90’ஸ்க்கே போய்ட்டேன்…,

கதிர் அடுத்த நாள் பள்ளிக்கூடம் போனதும், பகல்ல அம்மா கடைய பாத்துக்குறாங்க..,

கைமுறுக்கு, அதிரசம், பணியாரம், உளுந்தை வடை, ஆமை வடை, சீயம் இதெல்லாம் சாயங்காலம் செஞ்சு விப்பாங்க..!

சாயங்காலம் 5 மணிக்கு கதிர் எங்கேயும் போய் ஊர் சுத்தாம நேரா வீட்டுக்கு வந்திடுவான்..!

ஒருநாள் வர கொஞ்சம் தாமதம் ஆனதும்,
அம்மாவும் பெருசா எதும் கவலைபடல,
ஸ்கூல்ல எதாது வேலை இருந்திருக்கும்ன்னு விட்டுட்டாங்க.., பொழுதுசாஞ்சு 7 மணிக்கு வீடு வந்து சேந்தான் கதிர்.

ஏன் டா கதிர் இவ்ளோ நேரம்?

இல்லம்மா தாத்தாவுக்கு எழுதுன லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட போனேன்.. அப்போ அங்க அந்த பெரிய வீடு இருக்குல்ல??

தொடரும்…!

By Ramesh Fernandez 1425 Views

One thought on “கதிர் – களம் 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *